Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முக்கிய தனித் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. முதலமைச்சர் விஜய் இந்தத் தனித் தீர்மானத்தை முன்மொழிய உள்ளார்.
இந்தத் தீர்மானத்தில் மூன்று முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்பட உள்ளன. தற்போது நாடு முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையான 543 என்ற அளவையே நிரந்தரமாக நீடிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவது இதன் முதல் அம்சமாகும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்வதால், மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கவலை எழுந்துள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
இரண்டாவதாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சாரமான 2.2:1 என்ற அளவை தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் எனவும் தீர்மானத்தில் கோரப்படுகிறது. இந்த விகிதத்தில் மாற்றம் செய்தால் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்பதால் இதனை பாதுகாக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
மூன்றாவதாக, வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இதன் மூலம் தமிழக அரசு மீண்டும் அழுத்தமாக பதிவு செய்ய உள்ளது.
Hindusthan Samachar / vidya.b