Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்தாலும், அதன் வளர்ச்சி அரசியலில் பிரதிபலிக்கவில்லை என்றும், தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுன், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து,அவர் பேசுகையில்,
தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், அந்த வளர்ச்சி அரசியலில் பிரதிபலிக்கவில்லை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்.
தற்போது 5 முதல் 6 இந்தி பேசும் வட மாநிலங்கள் ஒன்றிணைந்தாலே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சூழல் உள்ளது.
தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்றத் தொகுதிகளை 50 சதவீதம் உயர்த்தினாலும் பாதிப்பு ஏற்படக்கூடும். இதன் மூலம் வட இந்திய ஆதிக்கம் உருவாகும் சூழல் ஏற்படும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடும் நேரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகும்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தும்போது, எந்த உறுப்பினரும் வெளிநடப்பு செய்யாமல் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அரசியல் ரீதியாக திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து இதனை எதிர்க்க வேண்டும்” என்றார்.
மேலும், மாநில சுயாட்சிக்காக முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் குரல் கொடுத்ததாகவும், தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்றும் ஆதவ் அர்ஜுன் குறிப்பிட்டார்.
“நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தைவிட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் முக்கியமானது. தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க இந்த விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P