Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்துக்குள்பட்ட சாப்டூர் கிராம மலைப் பகுதியில் அமைந்துள்ளது . இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி பிரதோஷம், ஆடி அமாவாசை வழிபாடுகள் 4 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இதன்படி, நிகழாண்டின் ஆடி அமாவாசை, பிரதோஷம் வழிபாட்டை ஒட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்ள பக்தர்களுக்கு ஆக. 10 முதல் ஆக. 13 ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் கடந்த சில நாட்களாக சதுரகிரி மலைப்பகுதியில் பரவிய காட்டுத் தீ காரணமாக பக்தர்கள் மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களின் தொடர் முயற்சியால் காட்டுத் தீ தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை சீரானதை அடுத்து பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆடி அமாவாசையான இன்றும் நாளையும் என இரண்டு நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் சென்று சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி காலை முதல் மாலை வரை மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவதுடன், வனத்துறையினரின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று இரவு 7 மணி அளவில் சதுரகிரி மலைப் பகுதியில் மீண்டும் தீ பரவி வருவதாகவும், இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், மலைப்பகுதியில் பரவிய காட்டுத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கோயிலுக்குச் செல்பவர்கள் தாணிப்பாறை வழியே மட்டும் அனுமதிக்கப்படுவர் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா இன்று காலை தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b