Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அலைசறுக்கு கூட்டமைப்பு சார்பில் 5 நாட்கள் நடைபெறும் உலக சர்ஃபிங் லீக் 2026 போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது.
மாமல்லபுரம் கடற்கரையில் சீறி வரும் கடல் அலைகளுக்கு மத்தியில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்ஃபிங் வீரர், வீராங்கனைகள் உற்சாகமாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில் இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து, ஸ்வீடன் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 சர்ஃபிங் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியா சார்பில் 12 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 8 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் தாமிரப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு எதிர்கால சர்வதேச போட்டிகளில் முன்னேறும் வாய்ப்பும் கிடைக்கிறது.
மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்த சர்வதேச அளவிலான சர்ஃபிங் போட்டியை காண ஏராளமான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கடற்கரையில் திரண்டுள்ளனர்.
கடல் அலைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு வீரர்கள் சர்ஃபிங் செய்த காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்திய அலைசறுக்கு கூட்டமைப்பு தலைவர் அருண் வாசு மற்றும் சர்ஃபிங் வீரர்கள் சிவராஜ் பாபு, கிஷோர் ஆகியோர் போட்டி மற்றும் இந்திய வீரர்களின் பங்கேற்பு குறித்து கருத்துகளை தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam