Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்டரான சேதேஷ்வர் புஜாரா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பல ஆண்டுகளுக்கு பிறகு நினைவு கூர்ந்துள்ளார்.
2018-19 மற்றும் 2020-21-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் முக்கிய வீரராக புஜாரா விளங்கினார்.
அந்த தொடர்களில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சை புஜாரா நீண்ட நேரம் எதிர்கொண்டார்.
இந்த இரு தொடர்களிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்தது.
இதன்பிறகு புஜாரா சிஎஸ்கே அணியில் இடம்பெற்றார்.
அப்போது அணியின் வலைப்பயிற்சியில் புஜாரா பேட்டிங் செய்ய சென்றபோது, அவருக்கு பந்துவீச ஹேசில்வுட் மறுத்துள்ளார்.
இதுகுறித்து புஜாரா கூறுகையில், “2018 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ஹேசில்வுட்டின் பந்துவீச்சை நான் அதிகமாக எதிர்கொண்டேன். அதன்பிறகு சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட்டேன்.
முதல்முறையாக வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்ய சென்றபோது, ஹேசில்வுட் எனக்கு பந்துவீச மறுத்துவிட்டார்.
‘இவருக்கு நான் பந்துவீச மாட்டேன்’ என்று அவர் கூறினார்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “ஏற்கனவே இவருக்கு அளவுக்கு அதிகமாக பந்துவீசிவிட்டேன் என்று ஹேசில்வுட் நகைச்சுவையாக கூறினார்.
அவர் விளையாட்டாக சொன்னாலும், உண்மையிலேயே அன்றைய வலைப்பயிற்சியில் எனக்கு பந்துவீசவில்லை” என்றார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதிய புஜாராவும் ஹேசில்வுட்டும், பின்னர் சிஎஸ்கே அணியில் சக வீரர்களாக இணைந்தபோது நடந்த இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை புஜாரா தற்போது நினைவுகூர்ந்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA