Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் தேநீர் விருந்து நடைபெற்றது.
இதில் திமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.
இந்த தேநீர் விருந்தை ஒட்டுமொத்த இந்தியா கூட்டணி கட்சிகளும் புறக்கணித்ததாக கூறப்படும் நிலையில், திமுக சார்பில் கனிமொழி பங்கேற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களில் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, திமுக தற்போது காங்கிரஸிடம் இருந்து விலகி இருப்பதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அதே வேளையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளுடனான உறவு தொடர்ந்து நீடிக்கிறது என்றும் திமுக தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ள சூழலில், திமுக சார்பில் கனிமொழி மட்டும் பங்கேற்றிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காங்கிரஸுடனான அரசியல் இடைவெளி ஒருபுறம் இருந்தாலும், நாடாளுமன்ற மரபுகள் மற்றும் பிற கட்சிகளுடனான உறவை கருத்தில் கொண்டே இந்தப் பங்கேற்பு அமைந்திருக்கலாம் என பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P