Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னையில் பக்கிங்காம் கால்வாயை மையமாகக் கொண்டு வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தின் பரிந்துரையின் அடிப்படையில், வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதற்கட்டமாக முட்டுக்காடு முதல் நேப்பியர் பாலம் வரை சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு வாட்டர் மெட்ரோ அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், திட்டத்தை விரிவுபடுத்தி எண்ணூரில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக மாமல்லபுரம் வரை சுமார் 53 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்தை (Water Metro) செயல்படுத்துவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் பக்கிங்காம் கால்வாய்க்கு மீண்டும் புத்துயிர் கிடைப்பதுடன், சென்னையின் சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மாற்று போக்குவரத்து வசதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ