Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையான மேகதாது விவகாரத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதாக குற்றம்சாட்டியும், விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யத் தவறியதைக் கண்டித்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்து வரும் நிலையில், அதைத் தடுத்து நிறுத்துவதில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அதிமுகவின் முக்கிய குற்றச்சாட்டாகும். இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அதேபோல், தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல், பெயரளவில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டு அரசு ஏமாற்றி வருவதாகவும் அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. விவசாயிகளின் துயர் துடைக்கத் தவறிய அரசின் போக்கைக் கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று நடைபெறுகிறது. இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
குறிப்பாக, காவிரி டெல்டாவின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கி கண்டன உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b