Enter your Email Address to subscribe to our newsletters

கர்னூல் , 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்,
கர்னூல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆலூர் தொகுதி எம்.எல்.ஏ. விரூபாக்ஷியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது சிறை அதிகாரிகள் தன்னிடம் மரியாதையின்றி நடந்து கொண்டதாக ஜெகன் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிறை சூப்பிரண்டு வேணுகோபால் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
“ஜெகன் சிறைக்கு வந்தபோது, சிறை விதிமுறைகளின்படியே அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.
முலாகாத் நேரத்தில் எந்தவிதமான மரியாதையற்ற சூழலும் ஏற்படவில்லை. முன்னாள் முதல்-மந்திரி என்ற அவரது அந்தஸ்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த அதிகாரியும், சிறை ஊழியரும் நடந்து கொள்ளவில்லை.
சிறையில் உள்ளவர்களை சந்திக்க வரும் ஒவ்வொருவரின் புகைப்படத்தையும் எடுப்பது கட்டாயமான நடைமுறையாகும். ஜெகன், சிறையில் உள்ள எம்.எல்.ஏ. விரூபாக்ஷி மற்றும் அவரது சகோதரர் ஸ்ரீராமை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்.
‘இ-பிரிசன்ஸ்’ மென்பொருளில் உள்ள விதிமுறைகளின்படி, சிறையில் உள்ள ஒவ்வொருவரையும் சந்திக்கும்போதும் அதற்கேற்ப புகைப்படம் பதிவு செய்ய வேண்டும்.
இதன் காரணமாகவே ஜெகனின் புகைப்படம் 2 முறை எடுக்கப்பட்டது. இது அவரை அவமதிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல” என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA