Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் தீ விபத்துகள் மற்றும் பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், தீயணைப்புத் துறைக்கு ரூ.40 கோடி செலவில் 58 நவீன தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த புதிய வாகனங்களை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த வாகனங்கள், பல்வேறு வகையான தீ விபத்துகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்கள் மற்றும் வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளை சமாளிப்பதற்காக 25 நவீன தீயணைப்பு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பெரிய அளவிலான தீ விபத்துகளின்போது தொடர்ந்து தண்ணீர் வழங்குவதற்காக 20 தண்ணீர் டேங்கர் வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன.
இதுதவிர, நகரங்களில் குறுகிய தெருக்கள் மற்றும் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள் எளிதாகச் செல்லும் வகையில் 13 விரைவு நடவடிக்கை பல்நோக்கு தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை சம்பவ இடத்துக்கு விரைவாகச் சென்று தீயை கட்டுப்படுத்துவதுடன், அவசரகால மீட்புப் பணிகளிலும் பயன்படுத்தப்படும்.
ஏற்கனவே முதல் கட்டமாக ரூ.33 கோடி செலவில் 65 தீயணைப்பு வாகனங்களை மாநில அரசு வாங்கி, தீயணைப்புத் துறைக்கு வழங்கியுள்ளது. தற்போது மேலும் 58 நவீன வாகனங்கள் சேர்க்கப்படுவதன் மூலம், ஆந்திர மாநிலத்தின் நகர்ப்புறம், கிராமப்புறம் மற்றும் வனப்பகுதிகளில் தீ விபத்துகளுக்கு விரைவாகப் பதிலளிக்கும் திறன் தீயணைப்புத் துறைக்கு அதிகரிக்கும்.
இதன் மூலம் தீ விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதத்தை குறைப்பதுடன், அவசர காலங்களில் பொதுமக்களுக்கு விரைவான மீட்பு சேவையை வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA