Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
DSP கவினா மேற்பார்வையில் போலீசார் ரயில் நிலையத்தில் வரும் மற்றும் செல்லும் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக, சந்தேகத்திற்கிடமான வகையில் உள்ள பைகள் மற்றும் கேட்பாரற்று கிடக்கும் உடைமைகள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், மோப்ப நாய்கள் உதவியுடன் பயணிகளின் உடைமைகள், ரயில் நிலைய நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்களை கண்டறியும் கருவிகளுடன் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகள் கண்காணிக்கப்பட்டு, பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்தும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், பயணிகளிடம் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் தென்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் ரயில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
RPF, GRP மற்றும் சென்னை மாநகர போலீசார் ஒருங்கிணைந்து இந்த பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுதந்திர தின விழா நிறைவடையும் வரை முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ