Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம், மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது;
பாஜக உடன் திமுக தற்போது நேரடிக் கூட்டணி வைத்துள்ளது. அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என கனிமொழி சோமு, வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி சிவா மத்திய மந்திரி ஆவார் என கூறப்பட்டதை திமுக தரப்பில் இருந்து யாரும் மறுக்கவில்லை. டெல்லியில் யாருடன் பேசினாலும் மக்கள் நலனுக்காக இருக்கும் என மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிப்போம் என திமுக ஒரு வார்த்தை கூறவில்லை. பாஜகவுடன் திமுக நேரடி கூட்டணி வைத்திருப்பது இதன் மூலம் தற்போது நிரூபணமாகியுள்ளது. இருக்கை மாற்றத்துக்காக தேநீர் விருந்தில் கலந்துகொண்டேன் என கனிமொழி கூறுவது நம்பும்படி இல்லை.
காவிரியில் நீர் திறப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. காவிரி உரிமையை காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஊடகங்களை அழைக்காததற்கு இடப்பற்றாக்குறையே காரணம். சுதந்திர தினத்தை ஒட்டி கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
டாஸ்மாக் தொடர்பான வழக்குகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆதாரங்களின் அடிப்படையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்ட யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. சட்டம் தனது கடமையை செய்யும்.
மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் தொழில் நிறுவனங்களிடம் இருந்து கட்சி நிதி வாங்கியதற்கான முறையான ஆவணங்கள் தற்போது அரசிடம் உள்ளது. முந்தைய அரசில் பல தொழில் நிறுவனங்கள் வெளிப்படையான ஒப்பந்தங்கள் இன்றி திரைமறைவில் ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் நிலை இருந்தது.
முன்பு கட்சிக்கு சென்று கொண்டிருந்த நிதி, தற்போதைய அரசின் வெளிப்படையான நிர்வாகத்தால் அரசுக்கு வருமானமாக மாறி வருகிறது
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b