Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் சங்ககிரியில், வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டியும், 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டும் தனியார் பள்ளி சார்பில் தேசப்பற்று பேரணி நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்ற மாணவிகள் பாரத மாதா வேடம் அணிந்து தேசப்பற்று உணர்வை வெளிப்படுத்தினர்.
மேலும், மாணவர்கள் இணைந்து 150 அடி நீளமுள்ள பிரம்மாண்ட தேசியக் கொடியை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். தேசியக் கொடியுடன் மாணவர்கள் சென்ற காட்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் உள்ளிட்ட தேசப்பற்று முழக்கங்களை எழுப்பினர். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களையும், நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையையும் போற்றும் வகையில் பேரணி நடைபெற்றது.
சங்ககிரியின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற பேரணியில், மாணவர்களின் தேசப்பற்று முழக்கங்கள் எதிரொலித்தன. பொதுமக்களும் பேரணியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
பேரணியை முன்னிட்டு சங்ககிரி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே தேசப்பற்று மற்றும் தேசிய ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணி சிறப்பாக அமைந்தது.
Hindusthan Samachar / P YUVARAJ