Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அந்நியர்களின் அடிமை ஆட்சியிலிருந்து நம் தாய்த்திருநாடு விடுதலை பெற்ற வரலாற்றுப் பொன்னாளான இந்நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்களை விரட்டியடித்திட, சிறை, சித்ரவதை, துப்பாக்கிச் சூடு எனப் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டும், தாய்நாட்டின் விடுதலையை மட்டுமே இலக்காகக் கொண்டு தங்களின் இன்னுயிரை ஈந்து நமக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த தன்னலமற்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் நாட்டுப்பற்றையும் தியாக உணர்வையும் இந்நாளில் போற்றி வணங்குவோம்.
நமது முன்னோர்கள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பேணிக் காத்திடும் இந்நாளில், சாதி, மதம், மொழி மற்றும் இன வேறுபாடுகளைக் களைந்து, நாம் அனைவரும் “இந்தியர்” என்ற ஒற்றுமை உணர்வுடன் ஒன்றிணைந்து, உலக அரங்கில் நமது இந்தியத் திருநாட்டை முன்னணி நாடாகக் கொண்டு செல்ல உறுதியேற்போம் எனக் கூறி, நாட்டு மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b