Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் வகையிலான பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய்யின் தாயார் குறித்து கருத்து தெரிவித்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் இருப்பவர்கள் தங்களது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், கொள்கைகளை விமர்சிக்கலாம், ஆட்சியின் செயல்பாடுகளை கேள்வி கேட்கலாம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.
இத்தகைய தரக்குறைவான கருத்துக்கள் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிப் போன அரசியல் என்றும், இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இதுபோன்ற மூன்றாந்தர அரசியல் அல்ல என்றும் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ