Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி, தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்ற வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து எண்ணற்ற தியாகங்களாலும், தொடர் போராட்டங்களாலும் இந்தியா இந்நாளில் விடுதலை பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், போராடிப் பெற்ற சுதந்திரம் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையில் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்றும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரம் என்பது வெறுமனே ஆங்கிலேய ஆட்சியிலிருந்து பெற்ற விடுதலை மட்டுமல்ல என்றும், மாநிலங்களின் உரிமைகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டுவதன் மூலமே அந்த விடுதலையை முழுமையாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தாய்நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிரையும் உடைமைகளையும் தியாகம் செய்த வீரர்களின் தியாகங்களைப் போற்றுவதோடு, அவர்கள் பெற்றுத் தந்த விடுதலையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும், கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும் எனவும் கனிமொழி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P