Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை திருவொற்றியூரில் 12ஆம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 12 பேரை அழைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 9 பேரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவன் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை பார்த்ததால் கொலை செய்யப்பட்டாரா அல்லது மாணவர்களுக்கிடையே ஏற்கனவே இருந்த முன்பகை காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, காவல்துறை தரப்பில் வெளியாகியுள்ள தகவல்களில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை காவல்துறை தரப்பில், கஞ்சா விற்பனையை பார்த்ததால் மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது அந்த தகவலுக்கு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு, மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட முன்பகை காரணமாகவே கொலை நடைபெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில் இதுவரை தெளிவான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில், 12 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ