Enter your Email Address to subscribe to our newsletters

ஏற்காடு, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் ஏற்காடு, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
இங்கு அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை கிடைத்ததால் நேற்று முதலே ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர்.
இன்று காலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்ததால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எங்கு பார்த்தாலும் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாததால், சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துமிடத்தை தேடுவதற்கே நீண்ட நேரம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
குறிப்பாக ஏற்காடு அண்ணா பூங்கா சாலை மற்றும் ஏரி பூங்கா சாலைகளில் அதிக அளவில் வாகனங்கள் குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் 2 மணி நேரமாக வாகனங்கள் ஒரே இடத்தில் சிக்கியிருந்ததால், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகினர்.
விடுமுறை நாட்களில் ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam