Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய முன்னாள் சபாநாயகர் அப்பாவு, இதனை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கிறதா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவையில் தனியார் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்துள்ள போதைப்பொருள் பயன்பாடு குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த மாணவர் அமுதன், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் 20 பேர் கொண்ட மாணவர் கும்பலால் தாக்கிக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அடுத்த சில நாட்களில் சென்னை திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் தினேஷ், போதைப்பொருள் பயன்படுத்தியதை காட்டிக்கொடுத்ததாக கூறி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது, தமிழ்நாடு காவல்துறை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்பாக இல்லாமல், சினிமாவில் மட்டுமே தோன்றும் காவல்துறையாக மாறிவிட்டதோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நீட் பயிற்சிக்கு சென்ற மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்தியதாக கூறப்படும் சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கம் பரவும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் காவல்துறையின் கவனத்திற்கு வரவில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாகவும் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறையின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாட்டை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அப்பாவு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் வழங்கப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் மாணவ, மாணவிகளைத் தேடி மதுவும் போதைப்பொருளும் செல்வதாக அவர் விமர்சித்துள்ளார்.
கல்லூரிகளை போதைப்பொருள் விற்பனை மையங்களாகவும், வகுப்பறைகளை மது அருந்தும் இடங்களாகவும் மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அப்பாவு, இதற்கு தமிழக அரசு மற்றும் ஆளுங்கட்சியினர் பொறுப்பேற்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ