Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கர்நாடக அரசு தற்போது கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறக்கத் தொடங்கியுள்ளது.
இந்த மாத தொடக்கத்திலேயே கர்நாடக பாஜக தலைவர்களான பி.எஸ்.யெடியூரப்பா, பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்டோர் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என போராட்டங்களை முன்னெடுத்தனர்.
தற்போது சட்டப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அதையும் தடுத்து நிறுத்தும் வகையில் அணை முற்றுகை போராட்டங்களை அறிவித்து பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்திற்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீர் உரிமையைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கும் பாஜகவின் செயல்பாடு கண்டனத்திற்குரியது என்றும், தமிழக விவசாயிகளுக்கு எதிரான இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும், தமிழகத்தின் நீர் உரிமைக்கு எதிராக தவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்க காங்கிரஸ் ஒருபோதும் தயங்கியதில்லை என்றும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கர்நாடக பாஜகவினர் தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதாகக் கூறப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எங்கே இருக்கிறார் என்றும், கூட்டணி கட்சித் தலைவர் ராமதாஸ் ஏன் மவுனம் காக்கிறார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக விவசாயிகளின் நலனில் உண்மையான அக்கறை இருந்தால், கர்நாடக பாஜகவினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் தங்களது கட்சியினரை கண்டிக்காமல், தமிழ்நாட்டில் மட்டும் அரசியல் நாடகம் நடத்துவது பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
காவிரி நீர் விவகாரத்தில் பாஜகவின் அரசியல் நிலைப்பாடும், அதன் பின்னணியில் உள்ள உண்மைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ