Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சிகளின்போது கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பொதுவெளியில் மாவட்ட தலைவரை அவதூறாக விமர்சித்ததாகவும் கூறி, நான்கு காங்கிரஸ் நிர்வாகிகளை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நீலன் அசோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி மன்னார்குடியில் நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சிகளில் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு விரோதமாகவும், பொதுவெளியில் பொறுப்பில் உள்ள மாவட்ட தலைவரை கொச்சையாக விமர்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன், நெடுவை ஜி. குணசேகரன், வடுகநாதன் மற்றும் சிட்டி ஹால் கே. பழனிவேல் ஆகிய நான்கு பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்டவர்கள் தங்களது செயல்பாடுகள் குறித்து உரிய விளக்கம் அளித்து மீண்டும் கட்சியில் இணையும் வரை, அவர்களுடன் கட்சி தொடர்பாக யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN