Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுகவின் வழக்கறிஞர் அணி வடக்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
திமுக வழக்கறிஞர் அணிச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடைபெற உள்ள இந்த முக்கிய கூட்டத்தில், திமுக இளைஞர் அணிச் செயலாளரும், முன்னாள் தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பணிகள், கழகத்தின் சட்டரீதியான நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மற்றும் வழக்கறிஞர் அணியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெறும் இந்த வடக்கு மண்டல கூட்டத்திற்கு முன்னதாக, கடந்த சில நாட்களாகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக வழக்கறிஞர் அணியின் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b