Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் திருத்திய பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5 அன்றும், வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6 அன்றும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதங்கள் முடிவடைந்து, கடந்த ஆகஸ்ட் 12 அன்று அமைச்சர்கள் இருவரூம் விரிவான பதிலுரையை வழங்கினர்.
தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நாளை முதல் தொடங்க உள்ளது.
கடந்த ஆகஸ்ட் 12 அன்று, மக்கள் தொகை அடிப்படையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராக, முதலமைச்சர் விஜய்யால் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆகஸ்ட் 13 (வியாழன்) முதல் ஆகஸ்ட் 16 (இன்று - ஞாயிறு) வரை சுதந்திர தின வார இறுதி நாட்களை முன்னிட்டு சட்டசபைக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நாளை தொடங்குகிறது.
இந்த விவாதத்தின் முதல் நாளான நாளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது.
இந்த விவாதத்தின் போது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தங்களது துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், புதிய அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து விரிவாக பதிலளித்து பேசுவார்கள்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கும், விவாதங்களுக்கும் பிறகு அந்தந்த துறைகளின் மானியக் கோரிக்கைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b