Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காட்டுப்பட்டியில் உள்ள சொக்கன்குளத்தில் நீர்மட்டம் வெகுவாக குறைந்த நிலையில், இன்று காலை பாரம்பரிய மீன்பிடி திருவிழா உற்சாகமாக நடைபெற்றது.
மீன்பிடி திருவிழாவில் பங்கேற்பதற்காக அதிகாலை 3 மணிக்கே சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குளக்கரையில் திரண்டனர். தொடர்ந்து கருப்பசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து முக்கியஸ்தர் ராமசுப்பிரமணி துண்டை வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் கச்சா, வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் குளத்தில் இறங்கி மீன்களை போட்டிப்போட்டு பிடித்தனர்.
கட்லா, சிலேபி, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் பொதுமக்களுக்கு கிடைத்தன.
சிறிய அளவிலான மீன்கள் முதல் சுமார் 7 கிலோ எடை கொண்ட மீன்கள் வரை கிடைத்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களைப் பிடித்துச் சென்றனர்.
பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மீன்களை பிடித்துச் சென்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ