Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சபரிமலை அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், திடீர் மழையின் போது பம்பை ஆற்றில் நீர்மட்டம் உயரவும், நடைபாதைகளில் வழுக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வர வேண்டும் என தேவசம் போர்டு மற்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆவணி மாதாந்திர பூஜைகளை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் பக்தர்கள் தங்களுடன் கட்டாயமாக ரெயின் கோட், குடை, வழுக்காத காலணிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை எடுத்து வர வேண்டும் எனவும், மலைப்பாதையில் கவனமாக நடந்து செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மழைக்காலம் என்பதால் தரிசனத்திற்கான திட்டமிடலை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவை பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b