சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் அற்புத பலன்கள்
சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த விரத நாளாகும். சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல் என்று பொருள். நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து வகையான துன்
சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் அற்புத பலன்கள்


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய மிக முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த விரத நாளாகும். சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல் என்று பொருள்.

நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து வகையான துன்பங்களையும் தடைகளையும் நீக்கி, மங்களத்தை வழங்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் தேய்பிறை நான்காம் நாள் (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில் வரும் மகா சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷமானது.

விரதத்தின் பின்னணிக் கதை:

ஒருமுறை சந்திர பகவான் தனது அழகைக் கண்டு கர்வமடைந்தார். அதைக் கண்டு கோபமுற்ற விநாயகப் பெருமான், சந்திரன் தன் ஒளியை இழந்து தேயுமாறு சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த சந்திரன், தேய்பிறை சதுர்த்தி திதியில் விநாயகரை நோக்கி கடும் தவமிருந்து சாப நிவர்த்தி பெற்றார். அன்றைய தினம் தன்னை வழிபடுபவர்களின் சங்கடங்களை நீக்குவதாக விநாயகர் வரமளித்தார்.

அதுவே சங்கடஹர சதுர்த்தி விரதமாக மாறியது.

விரதம் கடைப்பிடிக்கும் முறை:

சங்கடஹர சதுர்த்தி அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி, தூய்மையான ஆடை அணிய வேண்டும். வீட்டின் பூஜை அறையில் விநாயகர் சிலைக்கு அல்லது படத்திற்கு விளக்கேற்றி, விரதத்தைத் தொடங்க வேண்டும்.

அன்றைய தினம் முழுமையாக உபவாசம் (பட்டினி) இருப்பது நல்லது. உடல்நிலை அனுமதிக்காதவர்கள் பால், பழங்கள் அல்லது ஒருவேளை மட்டும் சாத்விக உணவு உட்கொள்ளலாம்.

விரதத்தின் முக்கியப் பகுதியே மாலை நேர வழிபாடுதான். மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரத்தில் அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

விநாயகருக்குப் பிரியமான அருகம்புல், எருக்கம்பூ மாலை, கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் பழங்களை நிவேதனமாகப் படைக்க வேண்டும். பால், தயிர், இளநீர் போன்ற பொருட்களால் நடக்கும் அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும்.

மாலையில் சந்திரன் உதயமாகும் நேரத்தில் (பொதுவாக இரவு 8.30 - 9.30 மணிக்குள்) சந்திரனைத் தரிசித்து, விநாயகரை வழிபட்டு, பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

விரதத்தின் அற்புதப் பலன்கள்:

சுப காரியங்கள், தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் நீண்ட நாள் தடைகள் அனைத்தும் பனி போல விலகும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி பெருகும், கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று விளங்குவர்.

ஜாதகத்தில் உள்ள சந்தேக தோஷங்கள் மற்றும் ராகு-கேது தோஷங்கள் நீங்கி, மனக் குழப்பங்கள் தீர்ந்து அமைதி கிடைக்கும்.

கடன் தொல்லைகள் நீங்கி, குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றமும், நிம்மதியும் நிலைத்திருக்கும்.

விநாயகப் பெருமான் எளிய வழிபாட்டிற்கு உகந்தவர். ஒரு கைப்பிடி அருகம்புல் கொண்டு அவரை மனதார வேண்டினாலும் ஓடிவந்து அருள் செய்வார். தொடர்ந்து 11 அல்லது 21 சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து வழிபடுபவர்களின் வாழ்வில் எந்தக் குறையும் இருக்காது என்பது முன்னோர்களின் வாக்கு.

ஓம் கம் கணபதயே நமஹ என்ற மந்திரத்தை உச்சரித்து விநாயகரின் அருளைப் பெறுவோம்.

Hindusthan Samachar / vidya.b