Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இதில் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ், மாநிலத்தில் டி.எஸ்.சி. ஆசிரியர் தேர்வு மற்றும் கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், டி.எஸ்.சி. ஆசிரியர் நியமன பணிகள் 148 நாட்களில் முழுமையாக நிறைவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த தேர்வு மற்றும் நியமன நடவடிக்கைகள் மிகவும் பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ளப்பட்டதாக கூறிய அவர், இனி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் டி.எஸ்.சி. தேர்வு நடத்தப்படும் என்று சட்டசபையில் உறுதியளித்தார்.
கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளிக் கல்வி முறையை வலுப்படுத்த பல்வேறு முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாரா லோகேஷ் தெரிவித்தார்.
குறிப்பாக ஆசிரியர் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுவதாகவும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த சர்வதேச அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதற்காக சிங்கப்பூர், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஆசிரியர்கள் பயிற்சிக்காக அனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்த அமைச்சர், அந்த ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களை மதுபானக் கடைகளின் அருகே பணியில் நிறுத்தி அவமதித்ததாக குற்றம்சாட்டினார்.
மக்கள் ஆட்சியில் அரசின் செயல்பாடுகளை கேள்வி கேட்கும் உரிமையும், கருத்து தெரிவிக்கும் சுதந்திரமும் அனைவருக்கும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
டி.எஸ்.சி. ஆசிரியர் நியமன நடவடிக்கைகள் தொடர்பாக நீதிமன்றங்களில் 336 வழக்குகள் தொடரப்பட்டதாகவும் நாரா லோகேஷ் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப, டி.எஸ்.சி. நியமனத்தில் செங்குத்து மற்றும் கிடைமட்ட இடஒதுக்கீடுகள் முறையாக அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் (TET) தேர்வுக்கு 3.68 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 1.87 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சட்டசபையில் தெரிவித்தார்.
அரசுப் பள்ளிக் கல்வி முறையை மேலும் வலுப்படுத்தவும், ஆசிரியர் நியமனங்களை முறையாக மேற்கொள்ளவும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நாரா லோகேஷ் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA