Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகை கண்மாய் பகுதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார்.
இன்று அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட எஸ்பி சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
கொலையுண்ட இளைஞரின் அடையாளம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கீழடி அருகே பட்டப்பகலில் கண்மாய் பகுதியில் நடந்த இந்த படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam