Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வினாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 12,500 கனஅடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருவதே இந்த திடீர் நீர்வரத்து அதிகரிப்புக்கு காரணம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் அருவியில் நீரின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
பிரதான அருவி, ஐந்தருவி, சினிஃபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் பாதுகாப்பு கருதி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் இரண்டாவது நாளாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நிலைமை சீரான பின்னரே பரிசல் இயக்க அனுமதி வழங்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b