‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ வெற்றிகரமாக நடைபெற வாழ்த்தி விஜய் கடிதம்
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெறவுள்ள விசிகவின் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ வெற்றிகரமாக நடைபெற வாழ்த்தி திருமாவளவனுக்கு முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழ்த் தேசிய எழுச்ச
Manadu


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெறவுள்ள விசிகவின் ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ வெற்றிகரமாக நடைபெற வாழ்த்தி திருமாவளவனுக்கு முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு வெற்றிகரமாக நடைபெற எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடமும் தமிழ்த் தேசியமும் இந்த மண்ணின் இரு கண்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை விளக்க மாநாட்டிலேயே அறிவித்தோம். எங்கள் செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை உருவாக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையே தமிழகத்தின் உறுதியான மொழிக் கொள்கை என்று அறிவித்துள்ளோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக மீனவர்களின் உரிமைகளுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தியுள்ளோம். கச்சத்தீவை இடைக்காலத் தீர்வாகக் குத்தகை அடிப்படையில் இந்தியா கேட்டுப் பெற வேண்டும் என்றும் கழகம் அன்றே வலியுறுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ 2026 தேர்தல் ஆவணத்தில் தமிழ் அடையாளம் தனி அத்தியாயமாக இடம்பெற்றுள்ளது. தமிழ் மொழி, கலாசாரம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்துதல், தமிழ் மொழியின் பயன்பாட்டை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், இலங்கைத் தமிழர்களின் உரிமையும் தனித்த முக்கியத்துவத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை சர்வதேச அளவில் தொடர்ந்து வலியுறுத்துதல், அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குதல் உள்ளிட்ட நிலைப்பாடுகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு, தமிழ்த் தேசியச் சிந்தனைக் களத்தில் எங்களது அரசியல் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இந்நிலையில், தாங்கள் முன்னெடுத்து வரும் இந்த தமிழ் தேசிய எழுச்சி மாநாடு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர் உரிமைகளின் அவசியத்தையும், தமிழ்த் தேசியத்தின் தேவையையும் உண்மைத்தன்மையுடன் உலகிற்கு எடுத்துரைத்து வரும் தங்களது முயற்சி பாராட்டுக்குரியது.

மேலும், இம்மாநாடு தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் குறித்த ஆழமான சிந்தனைகள், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் புதிய கொள்கை நோக்கங்கள் உருவாகும் ஒரு முக்கியமான தளமாக அமையும் என நம்புகிறேன்.

இம்மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று, தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகள், தீர்மானங்கள் மற்றும் செயல்திட்டங்கள் உருவாகிட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். இம்மாநாட்டின் முடிவுகள் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு புதிய திசையை அமைக்கட்டும்.

தமிழும் தமிழரும் உயரட்டும்!

தமிழ்நாடு வளம் பெறட்டும்!

என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN