Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 17 ஆகஸ்ட் (ஹி.ச)
நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோ, சுற்றுலா கார், வேன் மற்றும் ஜீப் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சுற்றுலாத் தலங்களுக்கு மினி பேருந்துகளை இயக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே சுற்றுலா வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சுற்றுலாத் தலங்களுக்கு மினி பேருந்துகள் இயக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கடந்த வாரம் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்திருந்தனர். சுற்றுலாத் தலங்களுக்கு மினி பேருந்துகளை இயக்கக் கூடாது என அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.
ஆனால் தாங்கள் அளித்த மனு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும், தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டி, அதனைக் கண்டிக்கும் வகையில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து வாகனங்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b