Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 18 ஆகஸ்ட் (ஹி.ச.)
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி மற்றும் தொழில்துறை புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் பயின்று நீண்ட காலமாக தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுதுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி 5 ஆண்டுகளுக்கு மேலாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக 2017-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற்ற மாணவர்கள், தாங்கள் பயின்ற பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நிலுவைத் தேர்வுகளை எழுதுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக பட்டம் பெற முடியாமல் தவித்து வரும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழக நிர்வாகம் இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த சிறப்பு தேர்வு மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்து பட்டம் பெற முடியும்.
இந்த சிறப்பு தேர்வை எழுத விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் பெரியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.periyaruniversity.ac.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b