சி.ஜி.எல் தேர்வை முன்னிட்டு புதுச்சேரியில் 69 பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி , 18 ஆகஸ்ட் (ஹி.ச.) புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக புதுச்சேரி அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வு புதுச்சேரி, காரைக்கால்
Two-day holiday announced for 69 schools in Puducherry due to the CGL exam


புதுச்சேரி , 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக புதுச்சேரி அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்தத் தேர்வு புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு, தேர்வு மையங்களாக செயல்படும் 69 பள்ளிகளுக்கு மட்டும் வரும், ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்கள், விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த பள்ளிகளின் பட்டியல் கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், பின்னர் வகுப்புகள் நடத்தப்படும். அதற்கான தேதிகள் மற்றும் கால அட்டவணை பள்ளி கல்வித்துறையால் தனியாக அறிவிக்கப்படும்.

தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தேர்வு முகமைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் வளாகத்தில் மாணவர்களின் நடமாட்டத்தை தவிர்க்கவும், தேர்வினை அமைதியான முறையில் நடத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிந்த பின்னர் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் புதுச்சேரி மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b