ஆகாஷின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது - நயினார் நாகேந்திரன்
சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.) விசிக ஆர்ப்பாட்டத்தில் ஆகாஷ் என்ற இளைஞர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், தஞ்சாவூரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினரிடம் தனக்கு வழிவிடுமாறு கேட
Nainar Nagenthran Byte


சென்னை, 18 ஆகஸ்ட் (ஹி.ச.)

விசிக ஆர்ப்பாட்டத்தில் ஆகாஷ் என்ற இளைஞர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்,

தஞ்சாவூரில் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினரிடம் தனக்கு வழிவிடுமாறு கேட்ட ஆகாஷ் என்ற இளைஞருக்கும் விசிகவினருக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவின் போது, காவல்துறையினர் விசிகவினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, ஆகாஷை கையை ஓங்கி அடிப்பது போல் அச்சுறுத்தி தாக்கியதும், அதற்கு எதிர்வினையாக அந்த இளைஞர் சிறப்பு உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்ததும் துரதிர்ஷ்டவசமானது; கண்டிக்கத்தக்கது.

ஆனால், இதில் தர்மத்தின் வழிநின்று, மனசாட்சிப்படி சற்று சிந்தித்துப் பார்த்தால், அந்த இளைஞரின் பக்கம் உள்ள நியாயமே நமக்குச் சரியெனப் படுகிறது.

காரணம், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டிருந்த விசிகவினரைத் தான் காவல்துறையினர் முதலில் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்.

அல்லது அறிவிக்கப்படாத இந்த ஆர்ப்பாட்டத்தால் பாதிப்பிற்குள்ளான பொதுமக்களிடம் பொறுமையாக பேசி, மாற்று வழி ஏற்பாடு செய்து கொடுத்திருக்க வேண்டும்.

அதற்காக, காவலர்கள் மீதான வன்முறையை யாரும் நியாயப்படுத்த முடியாது. அதேபோல், விசிகவினரின் Public Nuisance-ஐ தட்டிக் கேட்டவரை, அதிகாரத்தின் ஆணவத்தில் சில காவலர்கள் அச்சுறுத்தி, அமைதியாக்க முயன்றதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது.

அதிலும், அத்தனை காவலர்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து, வம்படியாக காவலர் வண்டியில் ஏற்றுவதைப் பார்த்தாலே மனம் பதறுகிறது.

சாதாரண குற்றங்களில் ஈடுபடுவோருக்கே தமிழக காவல் நிலையங்களில் அடிக்கடி ‘வழுக்கி விழுந்து’ எலும்பு முறிவுகள் ஏற்படும் நிலையில், ஆகாஷின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

எனவே, சம்பந்தப்பட்ட இளைஞரின் உயிருக்கும் உடமைக்கும் ஆரோக்கியத்திற்கும் முதல்வர் விஜய் முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN