ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பு
சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவையில் பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டார். பேரவை விதி எண் 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பில், ஆவின் பால் கொள்முதல்
Hike in Aavin milk procurement price


சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டார். பேரவை விதி எண் 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பில், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கூறியதாவது,

உலகில் தான் உற்பத்தி செய்யும் பாலை தனது சந்ததிகளுக்கு மட்டுமின்றி, மனிதர்கள் உள்ளிட்ட பிற ஜீவராசிகளுக்கும் வழங்கி உயிரைக் காக்கும் பசுவை தெய்வமாகப் போற்றி வளர்த்து வருவது நமது பாரம்பரியத்தின் சிறப்பு. இன்றைய அறிவியல் உலகில், ஒரு லிட்டர் பாலை உற்பத்தி செய்வதற்காகப் பசுவின் உடலில் சுமார் 500 லிட்டர் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதாகக் கூறப்படும்போது, பசுவின் உழைப்பை எண்ணி வியக்க தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் 8,800 பால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 3,16,000 பால் உற்பட்டதியாளர்களிடமிருந்து தினசரி 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் நிறுவனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 4.3% கொழுப்பு சத்து மற்றும் 8.2% இதர சத்துகள் அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், மாநில ஊக்க தொகையாக ஒரு லிட்டர் பாலுக்கு 3 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை 38 ரூபாய், 5.11.2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அதிகாலை 3 மணிக்கே எழுந்து மாடுகளைச் சுத்தம் செய்து பால் உற்பத்தி செய்யும் உற்பட்டதியாளர்களின் உழைப்பையும், தீவனம் மற்றும் வேலையாட்களின் கூலி உள்ளிட்ட அதிகரித்து வரும் செலவுகளையும் கடந்த கால அரசு போதிய அளவில் கருத்தில் கொள்ளவில்லை. உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்துள்ளது.

கடந்த காலத்தில் கொள்முதல் விலை உரிய அளவில் உயர்த்தப்படாத நிலையில், நம் அரசு சந்தித்து வரும் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும் பால் உற்பத்தியாளர்களின் நலனையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களின் உன்னதமான உழைப்பிற்கு உரிய மதிப்பை வழங்கும் வகையில் கொள்முதல் விலையை உயர்த்துவது நமது அரசின் கடமையாகும்.

தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கு மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாய் உயர்த்தவும், மேலும் அரசு ஊக்க தொகை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கொள்முதல் விலை உயர்வால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 30 கோடியும், ஒரு ஆண்டிற்கு 360 கோடியும் செலவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

தீவன விலை உயர்வு மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிப்பால் பால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்த நிலையில், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b