Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மாநிலத் திட்டத்தின் பெயருக்குப் பின்னால் மறைக்க வேண்டாம் என
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்,
முதலமைச்சர் விஜய் அவர்கள் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிவித்துள்ள நிலையில், தமிழக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) என்பது உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவியுடன் செயல்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும்.
இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனை சிகிச்சைகளுக்கான மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
வருமானத்தைப் பொருட்படுத்தாமல் 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த மருத்துவக் காப்பீட்டை விரிவுபடுத்திய மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு முடிவு, நமது மூத்த குடிமக்களின் கண்ணியத்தையும் மருத்துவப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும்.
தமிழகத்தில் ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான CMCHIS உடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் மத்திய-மாநில அரசுகளின் ஆதரவிலும், மாநில அரசின் நிதியுதவியிலும் பயனாளிகள் மருத்துவப் பலன்களைப் பெற்று வருகின்றனர்.
ஆனால், இங்கு ஒரு முக்கியமான கவலை உள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு போதிய முக்கியத்துவமும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் வழங்கப்படாமல், அதன் பலன்கள் பெரும்பாலும் தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) என்ற பெயரின் கீழ் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது வெறும் அரசியல் ரீதியாக யார் பெயர் பெறுகிறார்கள் என்பது பற்றிய விஷயம் அல்ல. தங்களது மருத்துவச் செலவுகளுக்கு யார் நிதியுதவி செய்கிறார்கள்.
தங்களுக்கு என்னென்ன மருத்துவப் பலன்கள் கிடைக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு முழு உரிமை உள்ளது.
உண்மையில், மாநில மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் PM-JAY உடன் ஒருங்கிணைக்கப்படும் போது, ஆயுஷ்மான் பாரத் PM-JAY திட்டத்தின் பெயரும் அடையாளமும் முக்கியமாக இடம்பெற வேண்டும் என்று தேசிய சுகாதார ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் தெளிவாகக் கூறுகின்றன.
எனவே, இன்றைய அறிவிப்புக்குப் பிறகு, தமிழக அரசு கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மாநிலத் திட்டத்தின் பெயருக்குப் பின்னால் மறைக்க வேண்டாம்.
பயனாளிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
பிரதமரின் தேசிய நலத்திட்டத்திற்கு மாநில அரசு உரிமை கோரக்கூடாது.
தமிழக மக்களுக்கு தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டியது:
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் மருத்துவப் பலன் என்ன?
மாநில அரசு வழங்கும் கூடுதல் பலன் என்ன?
ஒவ்வொரு திட்டத்திற்கும் யார் நிதியுதவி செய்கிறார்கள்?
புதிதாக அறிவிக்கப்பட்ட 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான திட்டம் PM-JAY உடன் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படும்?
நமது மூத்த குடிமக்களுக்கான மருத்துவப் பாதுகாப்பு என்பது சேவை, வெளிப்படைத்தன்மை மற்றும் கண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
அரசியல் விளம்பரத்திற்காகவோ, திட்டத்தின் பெருமையை யார் எடுத்துக்கொள்வது என்பதற்காகவோ இருக்கக் கூடாது என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN