Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான 1.4 ஏக்கர் நிலம், அதன் உண்மையான சந்தை மதிப்பான சுமார் 100 கோடி ரூபாயை மறைத்து வெறும் 2 கோடி ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்விவகாரத்தில் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் 48, விழுப்புரம் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் 56, நிலம் வாங்கிய திருப்பூர் பாப்பன்குளம் வெள்ளைத்துரை 60, பழநி சேதுபதி 67, வழக்கறிஞர் அன்வர்தீன் 65, ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் 38, ஆகியோரை கைது செய்தனர்.
உடல் நலக்குறைவால் அன்வர்தீன் மதுரை சிறையில் இறந்தார். நெஞ்சுவலியால் ஜஸ்டின் மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
ஒரே நாளில் நிலத்தை பத்திரப்பதிவு செய்ததற்கான அவசியம், அன்று கைதான சார்பதிவாளர் மேற்கொண்ட பிற பதிவுகள் உள்ளிட்டவை குறித்து தீவிரமாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.,யினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்க அனுமதி கோரி திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி.,யினர் மனு செய்தனர்.
இம்மனு இன்று (ஆக.,19) மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் முன் விசாரணைக்கு வருகிறது.
இதற்காக இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b