Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார், தும்பேரி கூட்டுச்சாலையில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர், 3 சவரன் தங்கச் சங்கிலியை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த நகையை சோதனை செய்தபோது, சங்கிலியில் உள்ள கொக்கி மட்டும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்ததும், மீதமுள்ள பகுதி போலி உலோகத்தால் செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து திலீப்குமார் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அம்பலூர் போலீசார், நகை அடகுக் கடையில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகையை அடமானம் வைத்துச் சென்ற பெண்ணை தேடி வந்தனர்.
விசாரணையில், போலி நகையை அடமானம் வைத்து பணம் பெற்றுச் சென்றது பெங்களூரைச் சேர்ந்த ரஞ்சனா சிங் என்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூருக்குச் சென்ற அம்பலூர் போலீசார், ரஞ்சனா சிங்கை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின்பேரில் ரஞ்சனா சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ