Enter your Email Address to subscribe to our newsletters

கத்தார், 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்று கொண்டிருந்த கத்தார் நாட்டின் திரவ இயற்கை எரிவாயுவை ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதாக பாதுகாப்பு புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் முக்கிய கடல்வழிப் பாதை வழியாக நடைபெறும் எரிவாயு விநியோகத்திற்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான கப்பல் கேஸ்லாக் ஷாங்காய் எல்.என்.ஜி டேங்கர் என வான்கார்ட் டெக் மற்றும் மரிஸ்க் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனங்கள் அடையாளம் கண்டுள்ளன.
ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் நேற்று இரவில் ஒரு கப்பல் தாக்கப்பட்டதாக பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது, ஆனால் கப்பலின் பெயரை அது குறிப்பிடவில்லை.
இதுவரை சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சரக்கு கப்பல் கடந்த ஜூலை 27-ம் தேதி கத்தாரில் இருந்து எல்.என்.ஜி சரக்கை ஏற்றிக்கொண்டு, ஜூலை 31-ம் தேதி ஹார்முஸ் நுழைவாயிலின் மேற்கு பகுதிக்கு அருகே சமிக்ஞை அனுப்புவதை நிறுத்தியதாக ப்ளூம்பெர்க் மற்றும் கெப்ளர் நிறுவனங்கள் தொகுத்த கப்பல் கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன.
தாக்கப்பட்டபோது கப்பல் சமிக்ஞை அனுப்பாமல் இருந்ததாக தெரிகிறது. கப்பலை நிர்வகிக்கும் கிரீஸை தளமாகக் கொண்ட கேஸ்லாக் நிறுவனம், வழக்கமான வேலை நேரத்திற்கு வெளியே கேட்கப்பட்ட கருத்துக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
கேஸ்லாக் ஷாங்காய் கப்பல் அடையாளம் தெரியாத ஏவுகணையால் தாக்கப்பட்டதை அதன் கப்பல் மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார், இதனால் கப்பலில் மின்தடை ஏற்பட்டதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ஏவுகணையால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எல்.என்.ஜி போக்குவரத்தை சீர்குலைத்துள்ளது. இந்த நீரிணை உலகளாவிய திரவ எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை கையாள்கிறது.
ஜூலை தொடக்கத்தில் ஹார்முஸ் அருகே கத்தார் எல்.என்.ஜி டேங்கர் ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து, உலகின் இரண்டாவது பெரிய எரிவாயு ஏற்றுமதியாளரான கத்தார், இந்த நீர்வழிப்பாதை வழியான தனது ஏற்றுமதியை மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b