Enter your Email Address to subscribe to our newsletters

கேரளம், 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
சபரிமலையில் கடந்த மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனின் போது போலி நெய் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள பால்வளத்துறை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்பு பிரிவு விசாரணையில், மில்மா நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்ட சுமார் 1.77 லட்சம் லிட்டர் நெய் முழுமையாக சபரிமலை சன்னிதானத்தை சென்றடையவில்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
விசாரணையில், முதல் நான்கு பேட்ச் நெய் மட்டுமே சன்னிதானத்தை சென்றடைந்ததாகவும், அதன்பின்னர் அனுப்பப்பட்ட நான்கு பேட்ச் நெய் பம்பையில் உள்ள பரிசோதனை மையத்திற்கே செல்லவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மில்மாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட நெய் வழியிலேயே வேறு இடங்களுக்கு கடத்தப்பட்டு, கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
மேலும், மில்மாவின் நெய் மாதிரிகள் பரிசோதனைக்காக பயன்படுத்தப்பட்ட நிலையில், சபரிமலைக்கு அதற்குப் பதிலாக தமிழ்நாட்டிலிருந்து தரம் குறைந்த நெய் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மில்மாவிலிருந்து லிட்டருக்கு ரூ.510-க்கு வாங்கப்பட்ட நெய், லிட்டருக்கு ரூ.720 வரை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கேரள பால்வளத்துறை சார்பில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P