Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 02 ஆகஸ்ட் (ஹி.ச)
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் நடை, நிறை புத்தரிசி பூஜையை முன்னிட்டு இன்று மாலை திறக்கப்படுகிறது.
இன்று மாலை 5 மணிக்கு கோயில் மேல்சாந்தி தலைமையில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை உத்திரட்டாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு, சபரிமலையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய வைபவங்களில் ஒன்றான நிறை புத்தரிசி பூஜை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இதன்படி நாளை காலை கோயில் தந்திரி தலைமையில், வயல்களில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை தனித்தனி கட்டுகளாக கட்டி, சன்னிதானத்தில் கொண்டு வந்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும் வேண்டி நடத்தப்படும் இந்த பூஜையில், பக்தர்கள் கொண்டு வரும் நெல் கதிர்களுக்கும் பூஜை செய்து பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.
நிறை புத்தரிசி பூஜை நிறைவடைந்த பின்னர், நாளை இரவு 10 மணிக்கு கோயில் நடை மீண்டும் அடைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b