Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 02 ஆகஸ்ட் (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு விடுமுறை நாட்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீப திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து பின்னர் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி இன்று அருணாசலேஸ்வரர் கோவில் ஆகம விதிப்படி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.
அதனை தொடர்ந்து ராஜ கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய நுழைவு வாயிலில் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து பின்னர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர்.
அதே போன்று இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் அருணாசலேஸ்வரர் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் வணங்கி பின்னர் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN