Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இலவச கார் வழங்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை நிலவும் நிலையில், ஏற்கனவே சொந்தமாக கார் வைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் இலவச கார் வழங்குவது தேவையற்ற செலவு எனக் குறிப்பிட்டுள்ளார்.
234 எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்குவதுடன், தனி உதவியாளர், ஓட்டுநர் ஊதியம் மற்றும் எரிபொருள் செலவுக்காக மாதம் ரூ.1 லட்சம் வழங்குவது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாயிகளின் நெல் பாதுகாப்பு, பொதுமக்கள் மீதான கட்டண உயர்வுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், எம்.எல்.ஏ.க்களுக்கு சொகுசு வசதிகளை வழங்குவது நியாயமற்றது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், 110 விதியின் கீழ் திட்டங்களை அறிவித்துவிட்டு அவை குறித்து சட்டப்பேரவையில் விமர்சிக்க முடியாத நிலை உருவாகக் கூடாது எனக் கூறிய அவர், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் திட்டத்தை கைவிட்டு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P