Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஆகஸ்ட் (ஹி.ச)
இன்றைய தமிழக சட்டப்பேரவையில் பேசிய பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவர், என்.எல்.சி நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தங்களின் வாழ்வாதாரமான விளைநிலங்களை நாட்டின் வளர்ச்சிக்காக தியாகம் செய்த விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கூட வேலை வழங்க என்.எல்.சி நிர்வாகம் மறுத்து வருவது மிகப்பெரிய துரோகம் என்று அவர் குறிப்பிட்டார்.
நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை என்பது சலுகை அல்ல, அது அவர்களின் உரிமை என்று வலியுறுத்திய சௌமியா, நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளை பணியில் சேர்த்துக் கொள்ள எதற்காக என்.எல்.சி தனியாக தேர்வு நடத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எப்போதும் தமிழக வெற்றிக் கழக அரசு துணை நிற்கும் என்றும், என்.எல்.சி விவகாரத்தில் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
சௌமியா அன்புமணியின் தொடர் புகார்களை அடுத்து, என்.எல்.சி நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் கிராமப் பாதிப்புகள் குறித்துப் பாமக முன்வைத்த சில நியாயமான வாதங்களை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும் ஆமோதித்துப் பேசினார்.
உள்ளூர் மக்களின் புகார்களைத் தொடர்ந்து கவனிக்க உள்ளதாகவும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு விவசாயிகளை ஒருபோதும் கைவிடாது நடைபெற்று வரும் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவே முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / vidya.b