ஈரான் போருக்கு மத்தியில் ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா ரகசிய எண்ணெய் போக்குவரத்து பாதை
ஈரான், 20 ஆகஸ்ட் (ஹி.ச.) ஈரானுடனான போர் தொடரும் நிலையிலும், உலக சந்தைகளுக்கு எண்ணெய் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்க ராணுவம் ரகசிய கப்பல் போக்குவரத்து பாதையை ஏற்படுத்தி இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் போருக்கு மத்தியில் ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா ரகசிய எண்ணெய் போக்குவரத்து பாதை


ஈரான், 20 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஈரானுடனான போர் தொடரும் நிலையிலும், உலக சந்தைகளுக்கு எண்ணெய் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்க ராணுவம் ரகசிய கப்பல் போக்குவரத்து பாதையை ஏற்படுத்தி இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கை பல வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு இரவும் 15 முதல் 20 எண்ணெய் டேங்கர்கள் ஓமன் கடற்கரையோரம் உள்ள தெற்கு கால்வாய் வழியாக இந்த நீரிணையை கடந்து செல்வதாக கூறப்படுகிறது.

வளைகுடாவில் இருந்து வெளியேறும் எண்ணெய் டேங்கர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு மட்டும் அமெரிக்க தலைமையிலான இந்த முயற்சி நின்றுவிடவில்லை.

அரபிக் கடலில் இருந்து வளைகுடாவுக்குள் நுழையும் காலி டேங்கர்கள், பிராந்திய துறைமுகங்களில் எண்ணெய் ஏற்றிக்கொண்டு மீண்டும் ஜலசந்தி வழியாக திரும்பிச் செல்லவும் அமெரிக்கப் படைகள் உதவி வருகின்றன.

டேங்கர்கள் உள்வரும் மற்றும் வெளியேறும் அணிவகுப்புகளாக திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு, அமெரிக்க ராணுவ ஒருங்கிணைப்பின் கீழ் தெற்கு கால்வாய் வழியாக வழிநடத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கை வடக்கு கரோலினாவில் உள்ள ஃபோர்ட் பிராக் தளத்தை மையமாகக் கொண்ட ஒரு சிறப்பு படைப்பிரிவால், வளைகுடா நாடுகளின் கூட்டு ஒத்துழைப்புடன் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த பாதை வழியாக சராசரி எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி பீப்பாய்களாக உயர்ந்துள்ளது, இது போருக்கு முந்தைய அளவில் பாதி அளவாகும். சில நாட்களில் இந்த ஓட்டம் ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி பீப்பாய்கள் வரை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க மத்திய கட்டளையகம் இரண்டு வாரங்கள் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரேடார் மற்றும் கடல்சார் கண்காணிப்பு கட்டமைப்புகள் சேதமடைந்த பிறகே இந்த நடவடிக்கை சாத்தியமானதாக அதிகாரிகள் கூறினர்.

இதன் விளைவாக தெற்கு கப்பல் போக்குவரத்து பாதையை கண்காணிக்கும் ஈரானின் திறன் குறைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது ஈரானியப் படைகள் சில மீட்டெடுக்கப்பட்ட ரேடார் அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் சிறிய படகுகளில் உள்ள கண்காணிப்பாளர்களை நம்பியுள்ளதாக அவர்கள் கூறினர்.

சந்தேகத்திற்குரிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றில் பலவற்றை அமெரிக்கப் படைகள் இடைமறித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக எரிசக்தி விநியோகத்திற்கு ஹோர்முஸ் ஜலசந்தி மிக முக்கியமான பாதையாகும், மேலும் இந்த நீர்வழி வழியான போக்குவரத்துக்கு ஏற்பட்ட இடையூறு ஈரான் போரின் மிகப்பெரிய பொருளாதார விளைவுகளில் ஒன்றாகும்.

தற்போதைய அமெரிக்க நடவடிக்கை இழந்த எண்ணெய் ஓட்டத்தில் ஒரு பகுதியை மீட்டெடுக்க உதவியுள்ளது, இருப்பினும் ஏற்றுமதி இன்னும் போருக்கு முந்தைய அளவை விட மிகக் குறைவாகவே உள்ளது. முன்னதாக, ஜலசந்தி வழியாக வணிகக் கப்பல்களின் நகர்வுகளை அமெரிக்கா ஒருங்கிணைத்து வருவதாகவும், தெற்கு பாதையை திறந்து வைக்க பணியாற்றி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வாஷிங்டன் தற்போது தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், அவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நேரத்தை வீணடிப்பது என்றும் டிரம்ப் கூறினார்.

ஹோர்முஸ் ஜலசந்தி அமெரிக்கா-ஈரான் மோதலில் மையமான பதற்றப் புள்ளியாக மாறியுள்ளது. வாஷிங்டன் நீர்வழிப்பாதை திறந்தே இருப்பதாக வலியுறுத்தும் அதே வேளையில், அந்த பாதையின் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு குறித்த செய்திகளை ஈரான் மறுத்து வருகிறது.

கப்பல் போக்குவரத்தை போருக்கு முந்தைய இயல்பு நிலைக்கு கொண்டு வராமல், எரிசக்தி விநியோகத்தை தொடர்ந்து இயங்க வைக்கும் முயற்சியாகவே அமெரிக்காவின் இந்த சமீபத்திய நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b