Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், நியாய விலை கடைகளில் பயன்படுத்தப்படும் PSO விற்பனை இயந்திரங்களில் அடிக்கடி ஏற்படும் சர்வர் கோளாறைக் கண்டித்து, இயந்திரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.
இணையதள சேவை பாதிப்பால் சர்வர் கோளாறு ஏற்படுவதால், பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் நியாய விலை கடை பணியாளர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு 150க்கும் மேற்பட்ட நியாய விலை கடை பணியாளர்கள் ஊர்வலமாக வந்து, தங்களிடம் உள்ள விற்பனை முனைய இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலர் சுமதியிடம் ஒப்படைக்க முயன்றனர்.
ஆனால், இயந்திரங்களை பெற்றுக்கொள்ள அதிகாரி மறுப்பு தெரிவித்தார். மேலும், இணையதளத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப பிரச்சினை தற்போது சரிசெய்யப்பட்டு, விற்பனை முனைய இயந்திரங்கள் சீராக இயங்கி வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் நியாய விலை கடை பணியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN