Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் மொத்தம் 85 நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) செயல்பட்டு வருகின்றன. இக்கடைகள் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்படும் இணையவழி விற்பனை இயந்திரங்களில்
(POS Machines) கடுமையான சர்வர் கோளாறு நிலவி வருகிறது.
இதனால், பொருட்களை வாங்குவதற்கு ஒரு நபருக்கு பல மணி நேரம் ஆவதுடன், பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொடர் தொழில்நுட்பக் கோளாறால் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் சலசலப்பும் உருவாகி வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 85 ரேஷன் கடைகளின் ஆண், பெண் ஊழியர்கள் திரண்டு சென்று, தங்களது POS இயந்திரங்களை திருவாடானை தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் (TSO) ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதில் மேலும் சிக்கல் ஏற்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam