Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 21 ஆகஸ்ட் (ஹி.ச.)
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு செலவில் கார் வழங்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில், சேலம் மாநகராட்சியின் குடிநீர் திட்டத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம்,
மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு செலவில் கார்கள் வழங்கும் முடிவு தேவையற்றது என்றும், இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சேலம் மாநகராட்சியின் குடிநீர் திட்டத்தை சூயஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அரசு செயல்பட வேண்டும் என்றும் பெ.சண்முகம் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெளியிட்டதாக கூறப்படும் சுற்றறிக்கையை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், தலைமைச் செயலாளர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P