Enter your Email Address to subscribe to our newsletters

விசாகப்பட்டினம் , 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ், தனது மகன் தேவான்ஷுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 2 முதல் 3 மணி நேரம் கிரிக்கெட் விளையாடுவதாக மாணவர்களிடம் தெரிவித்தார்.
விசாகப்பட்டினம் மாவட்டம் பீமிலி தொகுதியில் உள்ள சந்திரம்பாலேம் மாவட்ட பரிஷத் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லோகேஷ் கலந்து கொண்டார்.
அப்போது பள்ளியில் ரூ.6.48 கோடிக்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம், வாலிபால் மற்றும் கூடைப்பந்து மைதானங்கள், நடைபாதை மற்றும் ஆர்.ஓ. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றையும் லோகேஷ் திறந்து வைத்தார்.
பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது தனது கிரிக்கெட் ஆர்வம் குறித்து பேசிய அவர்,
எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எனது மகன் தேவான்ஷுடன் 2 முதல் 3 மணி நேரம் கிரிக்கெட் விளையாடுவேன்.
அதற்கு மேல் நேரத்தை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு எங்களுக்கு கொடுக்கமாட்டார்” என்று நகைச்சுவையாக கூறினார். இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவர்களுடன் இணைந்து வாலிபால் மற்றும் கூடைப்பந்து விளையாடிய லோகேஷ், அவர்களை உற்சாகப்படுத்தினார்.
ஒவ்வொரு முறையும் மழை
சந்திரம்பாலேம் பள்ளிக்கு தான் வருவது இது 3-வது முறை என்றும், ஒவ்வொரு முறையும் தான் வரும்போது கனமழை பெய்வதாகவும் லோகேஷ் குறிப்பிட்டார்.
இந்த பள்ளியின் பெயரை கேட்டாலே எனக்கு மழைதான் நினைவுக்கு வருகிறது. எனது தொகுதியான மங்களகிரியில் உள்ள பள்ளிக்கு கூட நான் 3 முறை சென்றதில்லை என்று அவர் நகைச்சுவையாக கூறினார்.
நிகழ்ச்சியில் பீமிலி தொகுதி எம்.எல்.ஏ. கண்டா சீனிவாசராவ், காஜுவாகா தொகுதி எம்.எல்.ஏ. பல்லா சீனிவாசராவ், அரசு கொறடா வேபாடா சிரஞ்சீவிராவ், மாவட்ட கலெக்டர் எம். அபிஷிக்த் கிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் லோகேஷின் வருகையையொட்டி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA