Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி , 22 ஆகஸ்ட் (ஹி.ச.)
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர், தமிழக எல்லையான ஒகேனக்கல்லுக்குள் நுழைவதற்கு முன்பாக பிலிகுண்டுலு பகுதிக்கு வந்தடைகிறது.
தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றின் நீர்வரத்து தற்போது குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதே இதற்கு காரணம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு சற்று குறைந்துள்ளதும் நீர்வரத்து சரிவுக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.
நீர்வரத்து குறைந்துள்ள போதிலும், ஒகேனக்கலில் ஆற்றில் நீரோட்டம் இன்னும் சீற்றமாகவே உள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை ஏழாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
நீர்வரத்து சீரான நிலையை எட்டும் வரை இந்த தடை நீடிக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b